கெரவலப்பிட்டிய யுகதனவி அனல் மின்நிலையத்தின் அரசாங்கத்துக்கு சொந்தமான 40 சதவீத பங்குகளை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ போட்ரெஸ் எனெர்ஜி நிறுவனத்துக்கு வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோரே இன்றையதினம் (26) ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

சட்டத்தரணி சுனில் வட்டகல ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை, இலங்கை மின்சார சபை, நியூ போட்ரெஸ் எனெர்ஜி பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 43 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு கூட அரசாங்கம் விளக்கமளிக்கவில்லை என மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட பங்குப் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படவில்லை என்றும், முறையான விலைமனுக்கோரல் நடைமுறைக்கு ஏற்ப உரிய பங்குகளை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

செப்டெம்பர் 6ஆம் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறும், மனு மீதான விசாரணைகள் முடியும் வரை இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் நீதிப்பேரரணை உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள், தமது மனுவில் கோரியுள்ளனர்.