நவம்பர் 1 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் 25 சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்திருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், மேற்பரப்புகளை அடிக்கடி தொடுவதைத் தவிர்த்தல் என்பன கடுமையாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.

31ஆம் திகதி நள்ளிரவு முதல் மாகாணங்களிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதுடன், பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது, ஆசன எண்ணிக்கைக்கு மிகாமல் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடல் மற்றும் குளிரூட்டப்படாத ஜன்னல்கள் திறக்கப்பட்ட நிலையில் பொதுப் போக்குவரத்துகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுடன், பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

வேலைத்தளங்களுக்கு வரும் ஊழியர்கள் கட்டுப்படுதப்பட வேண்டும் என்பதுடன் வீட்டிலிருந்து வேலை ஊக்குவிக்கப்படுகிறது.

பொது ஒன்று கூடல்கள் ஊக்குவிக்கப்படமாட்டாது.

ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு மேலதிகமாக வெளியிடப்பட்டவை கீழ்வருமாறு:

வீடுகளை விட்டு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்படும் திகதிகளில் பாடசாலைகளின் சாதாரண மற்றும் உயர்தர வகுப்புக்களை மீள ஆரம்பிக்க அனுமதிக்கப்படும்.

பாலர் பாடசாலைகள் 50% திறனில் தொடர்ந்து செயற்படலாம்.

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவகங்கள் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களின்படி செயற்பட முடியும். அதே வேளையில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் 50% திறனில் செயல்பட முடியும்.

மண்டபங்களின் வழக்கமான திறனில் 1/3 அளவுக்கு, அதிகபட்சம் 150 நபர்களுக்கு மிகாமல், கூட்டங்களை நடத்தலாம்.

தனியார் ஒன்று கூடல்கள் அதாவது வீடுகளில் ஒன்று கூடும் போது 10 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பொருளாதார மையங்கள்: நாள் கட்டணம், திறந்த சந்தைகள் மற்றும் நடமாடும் விற்பனையாளர்கள் கடுமையான கண்காணிப்பின் கீழ் மொத்த வணிகத்துக்காக திறக்க அனுமதிக்கப்படுவார்கள்.

கடைகள், மளிகைப் பொருட்கள், மருந்தகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் 1/3 திறன் கொண்டவையாக இருக்க முடியும்,

அதே நேரத்தில் நிதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 15 நபர்களுடன் ஒரே நேரத்தில் திறக்க அனுமதிக்கப்படும்.

இதேவேளை, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை டிசெம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.