இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது தொடர்பில் சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகள்” என்ற தலைப்பில், பென்டகன், நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக தொலைவில் தமது இராணுவ பலத்தை நிலைநிறுத்த சீனா முயல்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இலங்கை உட்பட 13 நாடுகளில் இராணுவ தளங்கள் அல்லது இராணுவத் தளவாட வசதிகளை நிறுவுவது குறித்து சீனா பரிசீலித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர், பாகிஸ்தான், மியன்மார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தாய்லாந்து ஆகியவை அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள பிற நாடுகளில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படைகளின் வலிமையை அதிகரிக்க இந்த வசதிகளை நிறுவ பரிசீலித்து வருவதாக பென்டகன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.