நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்சியாக மழையுடன் கூடிய கால நிலை நிலவி வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில் வெள்ள பாதிப்பு காரணமாக பதிக்கப்பட்ட 127 குடும்பங்களை சேர்ந்த 444 பேர் தற்காலிக இடைதங்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரதேச செயலக பிரிவில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக உள்ள ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், செல்வபுரம், தலைமன்னார், பேசாலை உட்பட அதிக வெள்ளப் பாதிப்புக்கள் காணப்படும் கிராமங்களில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு பிரதேச செயலகங்கள் ஊடாக அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் வெள்ளப் பாதிப்பு மற்றும் காலநிலை மழை வீழ்ச்சி என்பவற்றை கருத்தில் கொண்டு தொடர்சியாக தற்காலிக இடைத்தங்கள் முகாம்களில் செயற்பாடுகளை நீடிப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.