வவுனியா – நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காகப் பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று (27) காலை 5 மணியளவில் மரவள்ளிக் கிழங்குகளைப் பறிப்பதற்காக அருகில் உள்ள தோட்டக்காணிக்கு சென்றுள்ளார்.

எனினும் நீண்டநேரமாகியும் குறித்த முதியவர் வீட்டிற்கு வராத நிலையில் அவரது மனைவி அவரை தேடியுள்ளார். இதன்போது அவரது தோட்ட காணியில் சடலமாகக் கிடந்தமை அவதானிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் நொச்சிமோட்டை பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி சுப்பிரமணியம் வயது 69 என்ற முதியவரே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த முதியவர் விலங்குகளுக்காகப் பொருத்தப்பட்டிருந்த மின்சார இணைப்பில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.