கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் இன்று கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பொருட்கள் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பளை பொலிஸாரால் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நாளை அகழ்வு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளுடைய வரிச் சீருடை எச்சங்களும் மனித எலும்புக்கூட்டு எச்சங்களும் காணப்படுகின்றன..

இவற்றின் அடிப்படையில் குறித்த பொருட்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடையவையாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பல மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளுடையது என நம்பப்படும் அடையாள எச்சங்களும் சீருடைகளும் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.