நாட்டில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளினால் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூன்று மாதங்களில் குறைவடைவதாக  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றினை இட்டுள்ள அவர்,

நாட்டில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளினால் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூன்று மாதங்களில் குறைவடைகின்றது.

இதற்கமைய சைனோபாம் தடுப்பூசியினால் உருவாக்கப்படும் எதிர்ப்பு சக்தியே விரைவாக குறைவடைகின்றமை ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இரண்டாவது தடுப்பூசியாக மொடர்னா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஸ்புட்னிக் – வி, அஸ்ட்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக் – வி முதலாம் தடுப்பூசிகள் முறையே எதிர்ப்பு சக்தியை அதிகமாக வெளிப்படுத்தியுள்ளன.

எவ்வாறாயினும் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று கொவிட்-19 தொற்று உறுதியானவர்கள் ஆறு மாதங்களுக்கு பின்னர் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும்.

இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.