கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தனது கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபரில், கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
சீன நிறுவனமொன்றினால் இறக்குமதி செய்யத் தீர்மானித்த சேதன உரத் தொகைக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்குக் காரணமாகும்.

சர்ச்சைக்குரிய சீனாவின் குவிங்டாவோ சிவின் பயோடெக் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்ட சேதன உரத்திற்கான கடன் கடிதங்கள் மக்கள் வங்கியின் ஊடாக வௌியிடப்பட்டன.

எவ்வாறாயினும், இலங்கையின் தாவர தனிமைப்படுத்தல் சேவை, உர மாதிரிகளை பரிசோதித்த பின்னர், உர மாதிரிகளில் அர்வினியா பக்டீரியா இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறியது.

பின்னர் குறித்த நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.