பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள தேவாலயத்தில் நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பான விவரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வெளியிட்டுள்ளார்.

வெப்பத்தினால் வெடிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கைக்குண்டு, தேவாலயத்துக்கு அருகில் வசிக்கும் 13 வயதான சிறுவனின் மூலம் தேவாலயத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை 4 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அதில் மருதானையைச் சேர்ந்த 56 வயதான பிரதான சந்தேகநபர் கடந்த 16 வருடங்களாக குறித்த தேவாலயத்தில் சேவையாற்றி வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குண்டைத் தயாரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களின் பாகங்கள் அவர் தங்கியிருந்த அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும் பொரளை பொலிஸாரும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

13 வயதான சிறுவனை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவினால் சிறுவனிடமிருந்து இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.