2022 பெப்ரவரி 1முதல் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம் பெற்ற வங்கிகள், ஏனைய முறைசார் வழிகளூடாக ரூபாய்க் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகின்ற போது பரிமாற்றல் ஒன்றுக்கு ரூ.1,000 கொடுப்பனவு செய்வதன் மூலம் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணப் பரிமாற்றல் செலவினை மீள வழங்கவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு நாணய மற்றும்  ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட வைப்புகள் இரண்டுக்கும் உயர்வான வட்டி வீதங்களை அறிமுகப்படுத்தல் வேண்டும் என்றும் சபை தீர்மானித்துள்ளது.

தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் பேரண்ட பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலித்து, நேற்றுமுன்தினம் (19) நடைபெற்ற நாணய சபை கூட்டத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் பல கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்ததாக, மத்திய வங்கி நேற்று (20) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை முறையே 50 அடிப்படை புள்ளிகளால் 5.5% மற்றும் 6.5% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை  அறிவித்துள்ளது.

இதன்படி, நிலையான வைப்பு மற்றும் கடன் வசதி விகிதங்களை திருத்துவதற்கும், எரிபொருள் கொள்வனவுக்கான அத்தியாவசிய இறக்குமதி கட்டணங்களை உரிமம் பெற்ற வங்கிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் இலங்கைக்கு வெளியில் வசிக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு அந்நிய செலாவணியை மட்டுமே  ஏற்றுக்கொள்ளுமாறும் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

“உள்நாட்டுத் தொழிலாளர்களின் பணம் அனுப்பும் ஊக்கத் திட்டத்தின்” கீழ் வழங்கப்படும் அமெரிக்க டொலரொன்றுக்கு வழங்கப்படும்  ரூ.2க்கு மேலதிகமாக தொழிலாளர் பணவலுப்பல்களுக்கு ஐக்கிய அமெரிக்க டொலரொன்றுக்கு ரூ.8ஐ ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.