ஹட்டன் – டிக்கோயா சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சலங்கந்தை பகுதியிலிருந்து ஹட்டனில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூக்கு இடம் கொடுக்க முயன்ற போது, குறித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் காயங்களுக்கு உள்ளான 17  தொழிலாளர்களும் டிக்கோயா கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  ஹட்டன் பொலிஸார்  தெரிவித்தனர் .

சம்பவத்தில் மரியசவரி என்ற 55வயதுடைய ஆண் தொழிலாளி  உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.