இலங்கையில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். 88 மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 82 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 6 பேருக்கும் டெல்டா பிறழ்வு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

ஜனவரி மாதத்தின் நான்காவது வாரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையையே அவர் இன்று வெளியிட்டுள்ளார்.

இதேவேளை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.சுகுணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு கம்பஹா, தவிர்ந்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் தொற்று அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று 100க்கு மேற்பட்ட நோயாளிகளும் 20 க்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களும் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மாவட்டத்தில் 40 க்கு அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 தினங்களில் 500 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் இந்த அபாயத்தை உணர்ந்தவர்களாக சுகாதார  நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.