2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக களக் கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 15 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

ஒழுக்காற்று காரணங்கள் போன்ற அவசர மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர, கிராம உத்தியோகத்தர்களை உரிய காலத்தில் அல்லது வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இடமாற்றம் செய்யக் கூடாது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் கிராம உத்தியோகத்தர்கள் காலை வேளைகளில் அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்டும் எனவும் எஞ்சிய நாள்களை களப்பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோய் காரணமாக 2022 வாக்காளர் பட்டியலுக்கான பி.சி. படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்காமலிருக்க தேர்தல் ஆணையம் சமீபத்தில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.