யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன அதே போர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.

தற்பொழுது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல பலாலி விமான நிலையம் திறக்கப்படும். தற்போது பலாலி விமான நிலையத்தில் சில திருத்த வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக ஓடுபாதை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

மேலும் பல விமான சேவைகளுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் காரணமாக சற்று தாமதநிலை காணப்படுகின்றது. எனினும் அந்த வேலைகள் முடிந்த பின்னர் விரைவாக பலாலி விமான நிலையம் திறக்கப்படும். என்றார்.