மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும் (30). இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று (30) நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன. அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் வெளியீடான ‘காந்தீயம்’ பத்திரிகையும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான C.V. விக்னேஸ்வரனால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இந்திய துணை தூதுவர் ராம் மகேஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், C.V. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ப. கஜதீபன், எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.