அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முகா இந்து கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.

ஆசிரியையின் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை சண்முக இந்து கல்லூரிக்கு முன்பாக, மாணவிகள் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2017ஆம் ஆண்டு இப்பாடசாலையில் அபாயா   பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், அப்பாடசாலையில் ஏற்கெனவே கடமையாற்றி வந்த ஆசிரியை மீண்டும் பாடசாலைக்கு இன்று (02) சென்றுள்ளார்.

இந்நிலையில் ,குறித்த பாடசாலை அதிபர் காரியாலயத்தில் கடமை பொறுப்பேற்க சென்ற நிலையில், பாடசாலை நிர்வாகத்துக்கும் குறிப்பிட்ட பெண் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  பாடசாலையின் அதிபர் தன்னை தாக்கியதாகவும்,  அபாயா அணிந்து வந்த ஆசிரியையும், அபாயா அணிந்து வந்திருந்த ஆசிரியை தாக்கியதாக அதிபரும்,   திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதற்கென சென்றுள்ளனர்.

எனினும், இந்த விவகாரம் தொடர்பில் மாணவிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது. இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.