மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிமனைக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று (09) காலை 8.30 தொடக்கம் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி, மன்னார், நானாட்டான், மடு, முசலி மற்றும் மாந்தை மேற்கு பகுதிகளைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இப்போரட்டத்தை முன்னெடுத்தனர்.

25 வருடங்களுக்கு மேலாக முன் பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்ற நிலையில், இதுவரை தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வில்லை எனவும், முன் பள்ளிகளில் பல தரப்பட்ட கல்வி நடவடிக்கைகளுக்கு தங்களை பயன்படுத்துகின்ற போதும் தங்களுக்கு மாதம் வெறுமனே 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுவதாகவும் முன்பள்ளி ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதி, ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தங்கள் கோரிக்கைகளை மகஜர்களாகவும் நேரில் சந்தித்து தெரிவித்துள்ள போதும் தங்களுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் விரைவில் தமது கோரிக்கை நிறை வேற்றப்படாவிட்டால், தொடர் போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அதேநேரம்  கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் 6,000 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை இன்று போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலிடம் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கையளித்தனர்