வவுனியா பொது வைத்தியசாலையில் நாளை (11) முதல் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தின் பிசிஆர் பரிசோதனை மாதிரிகள் யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிற்கு அனுப்பப்பட்டே, அதற்குரிய முடிவுகள் பெறப்பட்டு வந்தன.

வவுனியா வைத்தியசாலைக்கு 35 மில்லியன் ரூபா பெறுமதியான பிசிஆர் ஆய்வுகூட தொகுதி வழங்கிவைக்கப்பட்ட நிலையில் நாளை  முதல் அங்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.ராகுலன், வடமாகாண பிரதம செயலாளர் சமன்பந்துலசேன, வவுனியா வைத்தியசாலை சிரேஸ்ட ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் மற்றும் நுண்ணுயிரியல் நிபுணர்  ஆகியோரின் தீவிர முயற்சியின் பலனாக இந்த பிசிஆர் ஆய்வுகூட தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த காலங்களிலே உயிரிழந்தவர்கள் மீதான பிசிஆர் (Post-mortem PCR) பரிசோதனைகள் மற்றும் ஏனைய PCR பரிசோதனைகள் யாழ் போதனா மருத்துவமனை அல்லது அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்ததுடன் அவ் முடிவுகள் பெறுவதற்கு பெரும்  காலதாமதம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக வைத்திய குழாம், நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் அசௌகரியங்களிற்கு உள்ளாகியிருந்ததாக வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

இதனை கருத்திற்கொண்டு வவுனியா பொது வைத்தியசாலையின் பிசிஆர் ஆய்வுகூடமூடாக முதற்கட்ட பணியாக உயிரிழந்தவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகளினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதோடு, தீவிர நோயாளிகளிற்கான பிசிஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் இவ் ஆய்வுகூட தொகுதியை வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் இயங்குநிலைக்கு கொண்டுவர உதவிய சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்த அவர் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் (ஆய்வுகூடம்) Dr. சுதத் தர்மாரட்ண அவர்கட்கு  தனது விசேட நன்றியை தெரிவித்துக்கொண்டார்.