கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் இடம்பெறும் சுமார் 1000 ஏக்கர்  பூர்வீக நில அபகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி  கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்படட கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான கிராமங்களில்  12 கிலோமீற்றர் நீளமான கடற்கரையுடன் இணைந்த கிராம மக்களின்  சுமார் 1000 ஏக்கர்  பூர்வீக நிலங்கள் இவ்வாறு அபகரிக்க  நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே சிங்கள குடியேற்றங்களாலும்,அரச நிறுவனங்களின் திட்டமிட்ட ஆக்கிரமினாலும் தமிழ் நிலங்கள்  கேள்விக்குள்ளாகி வரும் நிலையில் இதற்கு மேலதிகமாக கனிய மணல் கூட்டுதாபனத்துக்கு என மிகுதி நிலங்களையும் அபகரிக்கும் வேலையை அரசு மிக திட்டமிட்டு முன்னெடுத்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த நிலங்களை அபகரிப்பததை கண்டித்தும் அதற்கு  எதிர்ப்பு தெரிவித்தும்  கொக்கிளாய் கிராம மக்களால் இன்று (12)  கொக்கிளாய் பாடசாலை முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 குறித்த  போராட்டத்தில் மக்களுடன் இணைந்து மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும்  கலந்துகொண்டுள்ளனர்.