யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.

இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரும்புலிகள் தினத்தை நினைவுகூர முயன்றமை மற்றும் தீய செயல்களைச் ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டில் இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன், நல்லதம்பி நகுலேஸ்வரி மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 3 மற்றும் 06ஆம் திகதிகளிலும், 2 ஆயிரத்து 21 ஆம் 5 ஆம் மாதம் 28 ஆம் திகதியிலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, குறித்த சிறைக் கைதிகளின் உறவினர்கள் கைதிகளுக்கு ஆதரவாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகிறனர்.

மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.