உக்ரைனிலுள்ள 02 மாணவர்கள் உட்பட அண்ணளவாக 40 இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் – போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தற்போது ஈடுபட்டுள்ளது என, அமைச்சு, இன்று (01) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயன்முறைக்கு வோர்சோ மற்றும் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகங்களால் வசதியளிக்கப்பட்டு வருவதுடன், அங்காராவிலுள்ள தூதரகம் உக்ரைனுக்கு ஒரே நேரத்தில் அங்கிகாரம் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியேற்றும் செயன்முறையை திறம்பட எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வளங்களை வழங்கும் பணியை அமைச்சு பலப்படுத்தியுள்ளது.

உக்ரைனை விட்டு வெளியேறும் இலங்கைப் பிரஜைகளுடன் அங்காரா மற்றும் வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதுடன், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இலங்கைக்கு மீள நாடு திரும்புவதற்கும் வழிவகை செய்கின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது

உக்ரைனுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நிலைமையைக் கண்காணிப்பதிலும் வெளிநாட்டு அமைச்சு ஈடுபட்டுள்ளது.

அங்கிகாரம் பெற்ற இலங்கைத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள சம்பந்தப்பட்ட கௌரவத் தூதுவர்கள் மற்றும் இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றன.

பெலாரஸில் உள்ள எட்டு (08) பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் 1,556 மாணவர்கள் உட்பட, ஏறத்தாழ 1,600 இலங்கைப் பிரஜைகளுடன் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறது.

இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர் மற்றும் பெற்றோர் குழுக்கள் மற்றும் பெலாரஸில் உள்ள ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதுவர் நேரடித் தொடர்பில் ஈடுபட்டுள்ளார்.

அவசியமான சந்தப்பங்களில், வழக்கமான நிலை குறித்த புதிய தகவல்கள் பெற்றோருக்கு வழங்கப்படுகின்றன எனவும் சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிக் கொள்ளுமாறு பிராந்தியத்தில் உள்ள இலங்கைப் பிரஜைகளை அமைச்சு கேட்டுக்கொள்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.