மட்டக்களப்பு  – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரக்குளம் வயல்பகுதில் கொட்டகை ஒன்றில் வேளாண்மையை காவல் காத்துவந்த விவசாயி ஒருவர் நேற்று வெட்டுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஈரளக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான 54 வயதுடைய பரசுராமன் ஆறுமுகம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வயல் பகுதியில் உள்ள வேளாண்மை செய்கையை  காட்டுமிருகங்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து வயல்பகுதியில் அமைந்துள்ள கொட்டகைக்கு சென்ற நிலையில், வீடு திரும்பாத அவரை தேடியபோது கொட்டகையில் வெட்டுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸ் தடவியல் பிரிவு அழைக்கப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்