யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) காலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான யுத்தம் காரணமாக மூடப்பட்டது.

இத்தொழிற்சாலை 728 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தாலும், தற்போது அதன் பெரும்பாலான பகுதிகள் குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன.

2021 பெப்ரவரி 08 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பயன்படுத்தக்கூடிய கட்டிடங்களை தவிர ஏனைய கட்டிடங்களை இடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எனினும் 80 வீதமான கட்டிடங்களை புனரமைத்து பயன்படுத்த முடியும் என பிரதமரின் இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது தெரியவந்துள்ளது.

அதற்கமைய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை புனரமைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

பிரதமரின் இந்த கண்காணிப்பு விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏகநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கண்காணிப்பு விஜயத்தை தொடர்ந்து பிரதமர் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் பிரதம குருக்கள், ரட்னசபாபதி குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

ரட்னசபாபதி குருக்கள் இதன்போது கௌரவ பிரதமருக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.