நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் நாளை (04) முதல் பாடசாலை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 18 ஆம் திகதி வரையில் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் பாடசாலை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சையை நிறைவு செய்யாத மாணவர்களை மாத்திரம் அழைத்து உரிய பரீட்சைகளை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை முதல் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டாலும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழமை போன்று பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க சர்வதேச பாடசாலைகள் அனைத்தும் அடுத்த வாரம் மூடப்படும் என கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் அருட்தந்தை கெமுனு டயஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் திட்டமிட்டபடி குறித்த மாணவர்களுக்கான பரீட்சை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.