இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதுடன், நாட்டின் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடிகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு கைகொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து எதிர்நோக்கியுள்ள மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது முதலாவது கடன் மீளச் செலுத்தலை தவறவிடும் நிலையை எதிர்கொண்டுள்ளது. தனது உணவு மற்றும் வலுத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு, இந்தியா, சீனா போன்ற தனது நட்புறவு நாடுகளிடம் உதவிகளை கோரிவருகின்றது. இந்நிலையில் இலங்கைக்கு கைகொடுக்கும் வகையில் ஆசியாவின் முன்னணி பொருளாதார வலுப் பெற்ற சீனா மற்றும் இந்தியா போன்றன ஏற்கனவே பல பில்லியன்களை இலங்கைக்கு நிதி உதவியாக வழங்க முன்வந்துள்ளன எனவும் அந்தச் செவ்வியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை மற்றும் இந்தியா இடையே இடம்பெறும் பல்வேறு கலந்துரையாடல்கள் தொடர்பில் அறிந்திருக்கும் மூலங்கள் தெரிவிக்கையில், இலங்கைக்கு மேலும் நாணயப் பரிமாற்றம் மற்றும் கடன்கள் போன்றவற்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தது.