உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் முக்கியஸ்தரான சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்தது தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60 பேரில் 5 பேர் இன்று (22) வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஏனையவர்களை மே 4 ஆம் திகதிவரையிலும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் உத்தரவிட்டார்
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் மற்றும் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 69 பேரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் 4 வெவ்வேறு இலக்கங்களைக் கொண்ட வழக்கு தாக்குல் மேற்கொண்டனர் இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்னர்.
இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர்,ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டதுடன் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து 60 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுராதபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று (22) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சிறைச்சாலையில் இருந்து பலத்தபாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட 9 பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில், ஐவர் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் இரண்டு சரீரப்பிணைகளிலும் விடுதலைச் செய்யப்பட்டனர்.
அத்துடன் மாதாந்தம் 2 ஆம் மற்றும் 3 ஆம் கிழமைகளில் உள்ள ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொழுத்து இடுமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை ஏனைய 55 பேரையும் தொடர்ந்து மே மாதம் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் நீதவான் உத்தரவிட்டார்.