பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியகல்வோரின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவுகளின் பிரதானிகள் தெரிவிக்கின்றனர்.

கடல் மார்க்கமாக வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இலங்கைக் கடற்பரப்பில் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை விமானப் படையும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குறிப்பாக வடக்கில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும்  பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் வடக்கில் இருந்து சுமார் 200 பேர் இவ்வாறு இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்றும் தப்பிச் செல்ல முயன்ற பலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிலிருந்து தப்பிச் செல்லவதற்கு நீண்ட நாள் மீன்பிடி படகுகளை சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த படகுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசேட தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.