தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய யோசனைகளை, தேசிய கொள்கைக்கான தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் குழு, ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளன.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (1) இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே, அவர்கள் இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய, நடுத்தர, நீண்டகால நடவடிக்கைகள் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வது பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

11 அடிப்படை விடயங்களைக் கொண்ட பிரேரணையை ஆராய்ந்த பின்னர், எதிர்வரும் சில நாட்களுக்குள் அடுத்த கலந்துரையாடலை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பல்வேறு துறைகளில் நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல குழுக்கள் தயாராக இருப்பதாகவும், அந்த குழுக்களின் சாதகமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரங்களையும், வளங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டம் வருடாந்தம் அனைத்து அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், காலாண்டுக்கு ஒருமுறை அந்த இலக்குகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்குகளை அடையத் தவறிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அந்தபதவிகளில் இருந்து நீக்குவதன் அவசியமும் குறித்த யோசனையில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.