எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்களை பதிவுசெய்து கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நிதி நிலைமையை வலுப்படுத்தவும் 24 மணித்தியாலங்களும் மின்சாரத்தை வழங்கவும் நிலையான எரிபொருள் விநியோகம் சாத்தியமாகும் வரையிலும் வாடிக்கையாளர்கள் வாராந்தம் கோட்டா முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

4 மணித்தியால மின்சாரம் வழங்குவதற்காக டீசல், எரிபொருள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றுக்காக மாதமொன்றுக்கு100 மில்லியன் டொலர் கூடுதலாக செலவிடப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது.

4 மாதங்களுக்கு முன்னர் 200 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட மாதாந்த எரிபொருள் செலவு தற்போது 750 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.