கடந்த காலங்களில் விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுகட்டும் வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் வழங்கப்பட இருந்த பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இருந்த நிலைமையில் இருந்து இன்றைய நிலைமை வேறுபட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடியால் தற்போதைய பிரச்சினைகள் உருவாகிவருகின்றன என்றார்.

ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி அமர்வுகள் ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நடத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

உயர்தர மாணவர்களுக்கான திருத்த வகுப்புகள் உட்பட மேலதிக நிகழ்ச்சித் திட்டங்கள் மேலும், செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வார இறுதிக்குள் எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்குத் தீர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.