பொருளாதாரம் சீர்குலைந்த காரணத்தால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நான்கு ஆண்டுகள் தேவைப்படும் எனவும் முதல் வருடம் மிக மோசமானது என சர்வதேச நாணய நிதியம்  குறிப்பிட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இன்றையதினம் (11) அவர் வெளியிட்ட சிறப்பு வீடியோவிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

9ஆம் திகதி நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னர் வீடு செல்லும்  போராட்டக்காரர்கள் தனது வீட்டை தாண்டிச் செல்லுகையில் அமைதியின்மை ஏற்படக்கூடும் என்பதால் வீட்டை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் கூறியதாகவும் அதன் பின்னர் தானும் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறியதாக பிரதமர் தெரிவித்தார்.

தமக்கென உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்த ஒரே வீடு இன்று தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் அதிகமாக அழிந்துபோன சொத்துக்கள் தமது புத்தகங்களாகும் என்றும் அதில் வரையறுக்கப்பட்ட பதிப்பு மற்றும் அரிய புத்தகங்கள் இருந்தன என்றும் குறிப்பிட்டார்.

போர்த்துகேயர் காலம் மற்றும் ஒல்லாந்து கால புத்தகங்கள் உட்பட்ட 2500 புத்தகங்கள் அதில் இருந்தாகவும் அவற்றை பேராதனைப் பல்கலைக்கழகம், ரோயல் கல்லூரி மற்றும் பல இடங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு தானும் தனது மனைவியும் தீர்மானித்திருந்ததாக தெரிவித்தார்.

அதனை விட பழங்காலத்து சித்திரங்களும் இருந்தாகவும் குறிப்பிட்ட அவர், விமலதர்மசூரிய மன்னன் ஒல்லாந்து தூதுவரை சந்தித்த 200 வருட பழமைவாய்ந்த ஒல்லாந்து சித்திரமும் இருந்ததாகவும் ஒரேயொரு சித்திரம் எஞ்சியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதிய கலந்துரையாடல்களுக்கு இந்த இரண்டு வாரங்கள் முக்கியமானது என்றும் எரிபொருள் மற்றும் உணவு கொள்வனவுக்கு இது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் சட்டத்துக்கு கட்டுப்பட்டு அரசியலமைப்பின் விதிகளின்படி செயல்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும், அதன் மூலம் மக்களின் துயரங்களைக் கேட்பதற்குமான பிரதமர் தான் என்றும் குறிப்பிட்டார்.

சனிக்கிழமை (09) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் உடன்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அன்றைய தினம் மாலை டுவீட் பதவிட்டிருந்ததாகவும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ”ஏன் பிரதமர் இராஜினாமா செய்ய விரும்பவில்லை” என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், புதிய அரசாங்கத்தை அமைத்ததன் பின்னர் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்தார்.