இலங்கையின் 8 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வரவேற்றார்.

இதனையடுத்து, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த மே மாதம் 9ஆம் திகதி பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து மக்களின் எதிர்ப்பினை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கு அமைய பிரதமராக பதவி வகித்துவந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 14ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின்போது, 134 வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவானார்.