கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்காக 04 ஆவது தடுப்பூசியையும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் தற்போதைய சுகாதார நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இவ்வாரத்திற்குள் முன்னெடுக்க தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.

கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்கான PCR பரிசோதனையை தேவைக்கேற்ப முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொத்தணிகளாக COVID நோயாளர்கள் பதிவாவார்களாயின், அந்த பகுதிகளை இனங்கண்டு பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனக்க சந்திரகுப்த கூறினார்.

இதனிடையே, நாட்டில் நேற்று COVID தொற்றுக்குள்ளான 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று இருவர் COVID தொற்றால் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.