சீன உளவு கப்பலான ‘யுவாங் வாங் 5’ இன், வருகையை ஒத்திவைக்குமாறு, சீன தூதரகத்திடம் ராஜதந்திர கோரிக்கை விடுக்கப்பட்டமையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில்  இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனக் கப்பல், 2022 ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கு, இலங்கையின்  இராஜதந்திர அனுமதி, 2022 ஜூலை 12 அன்று கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து மேலதிக ஆலோசனைகள் காரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் இந்த கப்பலின் வருகையை ஒத்திவைக்க, கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திடம்  வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 இதேவேளை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு  செல்லும் உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணத்தை நிறுத்துமாறு இலங்கை விடுத்த, கோரிக்கையால் சீனா அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த விடயம் குறித்து இந்தியாவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பாதுகாப்புக் காரணங்களை  மேற்கோள் காட்டி கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று சீனா தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட  திட்டமிடப்பட்ட சீன விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆராய்ச்சிக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இன் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர், வாங் வென்பின் பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று கூறியுள்ளார்.

சீனாவின் அறிவியல் ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்கவும் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா, சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது என்றும் வாங் தெரிவித்துள்ளார்.