பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு கவலை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைத் தடை குறித்து சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய தகவல்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமீபத்தில் பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் சிலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

மேற்குறிப்பிட்ட மூவரும் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தடுத்துவைக்கப்பட்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

இதேவேளை, மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே உட்பட மூவரை தடுத்து வைக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள், கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாவும் அவர்களை அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் என நேற்று (21) வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்