நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று (22) காலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் உபவேந்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அதன்படி, செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வழமை போன்று முறையாக கற்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் சில பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

விரிவுரைகளுக்குச் செல்வதில் சிரமம் உள்ள மாணவர்கள் இணைய வீடியோ தொழில்நுட்பம் மூலம் விரிவுரைகளைக் கேட்கும் வாய்ப்பும் வழங்கப்படுவது என்றும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.