முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பிய சந்தர்ப்பத்தின் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (02) இரவு நாடு திரும்பினார். முன்னாள் ஜனாதிபதி நேற்று இரவு 11.45 மணியளவில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் மூலம் வந்தடைந்தார்.

நாட்டில் ஏற்பட்ட பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை 14ஆம் திகதி விமானப்படை விமானம் மூலம் மாலைதீவுக்குச் சென்றார்.

பின்னர், மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் ஒகஸ்ட் 11ம் திகதி வரை அந்நாட்டில் தங்கியிருந்தனர்.

அதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து சென்றார்.

கோட்டாபய ராஜபக்ச ஒரு மாதம் 19 நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு நாடு திரும்பினார்.

அங்கு முன்னாள் ஜனாதிபதியை வரவேற்க அமைச்சர்கள் பலரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாக தெரண விமான நிலைய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பின்னர், இலங்கை வந்த முன்னாள் ஜனாதிபதி, கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்றார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் பலரும் இன்று (03) குறித்த வீட்டிற்கு சென்றிருந்தனர்.