சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவும் இன்று அதிகாலையும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

கடல் மார்க்கமாக செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட இவர்களின் டிங்கி படகொன்றும் நீண்டநாள் ஆழ்கடல் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

18 வயதிற்கு மேற்பட்ட 17 ஆண்களும் 4 பெண்களும் 18 வயதிற்கும் குறைந்த 5 சிறார்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூநகரி, உடுத்துறை, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.