உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரேரணை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். தற்போதுள்ள 8,719 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்றே நாட்டு மக்கள் கோரி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

உறுப்பினர்களைக் குறைத்து, அதன் மூலம் மீதமாகும் நிதியை நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் ஜானக வக்கும்புர சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இதனை காரணமாகக் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்பட மாட்டாதெனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மேலும் குறிப்பிட்டார்.