வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்  இன்று (21) வெள்ளிக்கிழமை  காலை  யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிகண்டி  பகுதியில்  உள்ள  பாலாவி முகாம் பகுதியில் இடம்பெற்றது.

குறித்த 100 நாள் செயல் முனைவின் 82ம் நாள் போராட்டத்தில்  பாலாவி முகாமில்  உள்ள  பெண்கள், ஆண்கள்,இளைஞர்கள்,மற்றும் சிவில்  அமைப்பு  பிரதிநிதிகள் இதில்  கலந்து கொண்டனர். இதன்போது தமது சொந்த நிலங்களை விட்டு பல வருடங்களாக இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள தம்மை தமது சொந்த நிலங்களில் குடியேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ‘வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’, ‘ நாங்கள் நாட்டை துண்டாடவோ தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ‘ , ‘வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு   ஜனநாயக உரிமையாகும், 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.

பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை இல்லாதொழிப்போம்,  எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை,ஒன்று கூடுவது எங்கள் உரிமை,மத வழிபாடு  எங்கள் சுதந்திரம்,எமது மத தளங்களின் புனிதத்தை  கொச்சைப்படுத்தாதே,இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.