22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் தற்போது செயற்படும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலமும் நிறைவடையும் என்று நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனினும், சபாநாயகர் அனுமதி வழங்கியதன் பின்னர், குறித்த திருத்தம் அமுலுக்கு வரும் என்று தெரிவித்த அவர், புதிய ஆணையாளர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போதைய ஆணையாளர்கள் இடைக்கால ஆணையாளர்களாக செயல்படுவார்கள் என்றார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
நீதி சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேசிய கொள்வனவு ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, பொது சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், மேலுள்ள ஆணைக்குழுக்களுக்கு புதிய ஆணையாளர்கள் அடுத்த வாரங்களில் நியமிக்கப்படுவார்கள் என்றும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.