தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பில் இலங்கையில் உள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், தமிழகத்தில் உள்ள கூடலூரில் TANTEAநிறுவனத்தின் கீழ் வேலைசெய்யும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையக தமிழர்களை அவர்களது குடியிருப்புக்களில் இருந்து வெளியேறுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளமை தொடர்பில் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவந்தார். தமிழக அரசு அவர்களுக்கு இலவசமாக 650 புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர், அரசின் நிதிஒதுக்கீட்டில் குறித்த வீடுகளை இலவசமாக அமைத்துக் கொடுப்பதற்கான அறிவித்தலை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என உறுதியளித்தார்.