புரிந்துணர்வு உடன்படிக்கை (14.01.2023)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்திருக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) ஆகிய கட்சிகளும் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றாக இருக்க இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியாக, எமது இனத்துக்கான பலம் பொருந்திய கட்டமைப்பாக தோற்றம்பெற வேண்டுமென்ற கோரிக்கையை மறுதலித்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு பதிவுசெய்யப்பட்ட கட்சியாக உருவாக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தும், தானாகவே அதிலிருந்து வெளியேறியதால் மேற்கண்ட கட்சிகள் தமிழ் மக்களின் நலன்களையும், நம்பிக்கையையும் காப்பாற்றும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பாக எம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளோம்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இருதரப்பு அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களின் வரலாற்றுப்பூர்வ வாழ்விடமான இணைந்த வடக்குக் கிழக்கு பிராந்தியத்தில் தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவமாக வாழ்வதை உறுதிசெய்யும் வகையில் ஒற்றையாட்சி முறையை நிராகரித்து சமஸ்டி அடிப்படையிலான பூரண பொறுப்பு வாய்ந்த சுயாட்சியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டும் பல்வேறுபட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மேற்கண்ட அரசியல் அமைப்புக்கள் தமது நோக்கங்களை வெற்றிகொள்ளும் பொருட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தி இயங்குவது என்று தீர்மானித்துள்ளன.
மேலும், இலங்கைத்தீவின் எமது மரவுவழி தாயத்திற்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் சட்டபூர்வமானதும், ஜனநாயக ரீதியிலானதுமான சகல உரிமைகளை நிலைநாட்டுவதையும், பேணிப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இக்கூட்டமைப்பு செயற்படும்.
தமிழ் தேசியப் பரப்பில் இயங்கிவரும் பல்வேறுபட்ட கட்சிகள் 2001ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்டு வருகின்றபோதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நிறுவனமாக இல்லாமையினால் மேற்கூறிய கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டமைக்கப்பட்ட பலமான அரசியல் சக்தியாக உருவாக்குவதற்கு தீரமானித்துள்ளன.
மேற்கூறிய அரசியல் கட்சிகளுக்கிடையில் எட்டப்பட்டிருக்கும் கருத்தொற்றுமையின் பிரகாரம் பின்வரும் விடயங்கள் இந்த புது புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்படுகின்றன.
1. மேற்கூறிய அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும் கூட்டாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயல்படும்.
2. மேற்கண்ட கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய செயற்குழு ஒன்று அமைக்கப்படும்.
3. இத் தேசிய செயற்குழு வடக்கு கிழக்கு தமிழ் மக்களிற்கான முழுமையான அரசியல் தீர்வை நோக்கமாகக் கொண்டு அதனை அடைவதற்கான அனைத்து வழிகாட்டல்களையும், நெறிமுறைகளையும் வகுத்து செயற்படும்.
4. செயற்குழுவிலும், செயற்குழுவால் அமைக்கப்படும் ஏனைய குழுக்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு சம உரிமைகளும் சம அளவான பிரதிநிதித்துவமும் வழங்கப்படும்.
5. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுவின் ஏகமனதான முடிவுகளுக்கும் தவறும் பட்சத்தில் அதன் பெரும்பான்மை முடிவுகளுக்கும் அங்கத்துவக் கட்சிகள் கட்டுப்படும்.
6. மேற்கண்ட கட்சிகளையும் தேவையேற்படின் ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பரந்துபட்ட வலுவான கட்டமைப்பாக உருவாக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
7. தேர்தல் விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற பெயரிலும் அதன் சின்னமான குத்துவிளக்கையும் கொண்டு செயற்படும்.
8. இதற்கான நிரந்தர ஒரு கட்டமைப்பை சாத்தியமான நிலையில் உருவாக்கும்வரை இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றிலிருந்தும் கட்சித் தலைவர்கள் உட்பட தலா மூவரைக் கொண்ட தேசிய செயற்குழு ஒன்று நிறுவப்படும்.
9. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற நடவடிக்கைகளையும் இந்த செயற்குழுவே வழிநடத்தும்.
10. தமிழ் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளை கையாள்வதற்கும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏனைய பல பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் தேவையான நிபுணர் குழுக்களையும் ஏனைய உப செயற்குழுக்களையும் தேவை கருதி தேசிய செயற்குழு நியமித்துக் கொள்ளும்.
11. அங்கத்துவக் கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்டாலும் தத்தமது சுயாதீனத் தன்மையையும், தனித்துவத்தையும் பேணிக்கொள்ள உரித்துடையவர்கள்.
12. ஓவ்வொரு கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தலைமை அமைப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதுடன் அங்கத்துவக் கட்சிகளையோ அல்லது கூட்டமைப்பின் கொள்கை வேலைத்திட்டங்களை ஊடகங்களிலோ பொது மேடைகளிலோ அல்லது சம்பந்தமில்லாத் தரப்பினரிடமோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ கருத்திடுவது தவிர்க்கப்பட வேண்டும். இவை தொடர்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்படுகளையும் கண்காணிக்க ஒழுக்காற்றுக் குழுவொன்று நிறுவப்படும்.
13. ஒரு கட்சியின் நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றொரு கட்சிக்குத் தாவினால் அதை அங்கத்துவக் கட்சிகள் ஏற்கக்கூடாது.
14. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவமானது கூட்டுத் தலைமைத்துவமாகவும், சுழற்சி முறையிலான தலைமைத்துவமாகவும் அமையும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான முழுமையான யாப்பு உருவாகின்றபோது இந்த விடயங்கள் ஆழமாக பரிசீலிக்கப்பட்டு அதில் உள்ளடக்கப்படும்.
இந்த ஐந்து கட்சிகள் சார்பாக
திரு. செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் – தமிழீழ விடுதலை இயக்கம்)
திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் (தலைவர் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்)
திரு. சுரேஸ் பிறேமச்சந்திரன் (தலைவர் – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி)
திரு. நல்லதம்பி சிறீகாந்தா (தலைவர் – தமிழ் தேசிய கட்சி)
திரு. சிவநாதன் நவீந்திரவேந்தன் (தலைவர் -ஜனநாயக போராளிகள் கட்சி)
ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.