நாடாளுமன்றில் இன்று (18) நிறைவேற்றப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் சர்வதேச போதைப்பொருள் கொள்கை கூட்டமைப்பு என்பன தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வு பணியக சட்டத்தினூடாக குறித்த மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை இராணுவத்திற்கு வழங்க முயற்சிப்பதானது கவலையளிப்பதாக அந்த அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. அண்மையில் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற சம்பவங்களும் அதனை எடுத்துகாட்டுகின்றன.

இந்தநிலையில் சர்வதேச சட்டத்தை மீறும் வகையிலான குறித்த சட்டத்தின் ஊடாக போதைப்பொருள் குற்றச்சாட்டில் கட்டாயமாக புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.

இது சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசல் நிலை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மனிதாபிமான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் புனர்வாழ்வுக்கான அனுமதிக்கப்படுவோர் தொடர்பான தகவல்களை குறித்த சட்டம் தெளிவாக வெளிப்படுத்தவில்லை.

எனவே குறித்த சந்தர்ப்பத்தினூடாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைப்போரின் தனிமனித உரிமைகள் மீறப்படும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் சர்வதேச போதைப்பொருள் கொள்கை கூட்டமைப்பு என்பன தெரிவித்துள்ளன.