உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருகிறோம். அத்துடன் உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் உள்ளூராட்சிமன்ற அமைச்சருக்கே இருக்கிறது. அதனால் இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கேட்டிருக்கிறோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு திருப்தியடைய முடியாமல் இருக்கிறது.

அதேபோன்று தேர்தலை நடத்துவதற்காக அரச அமைப்புகளில் இருந்து கிடைக்கப்பெறும் ஆதரவு போதுமானதாக இல்லாமல் இருப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளேன்.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பான விசாரணை நடவடிக்கை துரிதமாகவும் செயற்பாடுடையதாகவும் இருக்கவேண்டும்.

அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடைய முடியும் என்பது தொடர்பாகவும் தெரிவித்திருக்கிறேன்.

அத்துடன் யார் என்ன சொன்னாலும் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டின் பிரகாரமே ஆணைக்குழு செயற்படுகிறது.  நிதிச் செயலாளர் பாராளுமன்ற நிதிக்குழுவுக்கு வந்த சந்தர்ப்பத்தில், நிதி பிரச்சினை தொடர்பாக குறிப்பிட்டிருந்தபோதும் தேர்தலுக்கு நிதி வழங்க முடியாது என தெரிவிக்கவில்லை.

மேலும், உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை. அது உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்  அமைச்சருக்கே இருக்கிறது. அதனால் இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கேட்டிருக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.