69 இலட்ச மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டேன். சுபீட்சமான இலக்கு கொள்கைத்திட்டத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் தமிழ்,முஸ்லிம் சமூகத்திற்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் நேற்று (31) மாலை அஸ்கிரிய,மல்வத்து ஆகியவற்றின் மகாசங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாவது.

கிழக்கு மாகாண ஆளுநராக கடந்த மூன்று ஆண்டு காலமாக பதவி வகிக்கிறேன்.கிழக்கு மாகாணத்தில் தமிழ்,முஸ்லிம் மற்றும் சமூகத்தினர் இனவாதம் இல்லாமல் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள்.13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்துமாறு கிழக்கு மாகாண மக்கள் கோரவில்லை.அரசியல்வாதிகளே நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சியில் மும்முரமாக செயற்படுகிறார்கள்.கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல்வாதிகள் குரல் கொடுப்பதில்லை.

30 வருட கால யுத்தத்தினால் கிழக்கு மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.தேசிய பொருளாதார அபிவிருத்தி திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண மக்கள் கோருகிறார்கள்.நாட்டை பிளவுப்படுத்துமாறு மக்கள் கோரவில்லை.

கிழக்கு மாகாணத்தில் 40 சதவீதம் முஸ்லிம் சமூகத்தினரும்,35 சதவீதம் தமிழ் சமூகத்தினரும்,25 சதவீதம் சிங்கள சமூகத்தினரும் வாழ்கின்றனர். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ் முஸ்லிம் சமூகத்தினருக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் தேவையில்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறுவது பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும்.13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏதம் கிடையாது.

69 இலட்ச மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியால் நான் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டேன்.சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அமைய செயற்படுகிறேன்,அத்திட்டத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை,சுபீட்சமான கொள்கை திட்டத்தில் இருந்து நான் விலகவில்லை,மாற்றமடையவுமில்லை என்றார்.