இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் அதனை தொடர்ந்தும் பேணவும் எதிர்பார்ப்பதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்திற்கு இணையாக அமெரிக்க – இலங்கைக்கிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 75 ஆண்டுகள் நிறைவடைவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன், இந்த நீண்டகால உறவு பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, சுபீட்சத்தை மேம்படுத்த உதவுமென கூறியுள்ளார்.

காலநிலை மாற்றம், மனிதக் கடத்தலை தடுத்தல், சுதந்திரமான மற்றும் திறந்த இந்து-பசுபிக் பிராந்தியத்தை பேணுதல் உள்ளிட்ட விடயங்களில் வரலாறு முழுவதும் இரு நாடுகளும் பாரிய சவால்களை எதிர்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.