உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கையை 5,100 வரை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக எல்லை நிர்ணயத்திற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் 8,000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

இதனிடையே குழுக்கள் ஊடாக மாவட்ட மட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகள், பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் தமது சபையின் பரிந்துரைகளை ஆராய்ந்து மாவட்ட மட்டத்திலான எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென எல்லை நிர்ணயத்திற்கான தேசிய சபையின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்குச் சென்று தமது அறிக்கைக்கான இறுதித் திட்டங்களைப் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொலன்னறுவை, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட 12 மாவட்டங்களின் முன்மொழிவுகள் எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என எல்லை நிர்ணயத்திற்கான தேசிய சபையின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

மார்ச் மாத இறுதிக்குள் தமது இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.