உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை வழங்குவது மிகவும் சிரமமான விடயமென அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திறைசேரியிடம் போதிய நிதியின்மையே இதற்கான காரணமென அவர் கூறியுள்ளார். தற்போது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிலவும் நிதி நெருக்கடி, இதில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக குறித்த சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேவைக்கேற்றவாறு நிதியை விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்கவிடம் வினவிய போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்ட கடமை என்பதால், பகுதி பகுதியாகவேனும் நிதி வழங்கப்படுமென நிதி அமைச்சு ஏற்கனவே தெரிவித்துள்ளதாக கூறினார்.

அதற்கமைய நடவடிக்கை எடுக்கப்படுமென தாம் நம்புவதாகவும் சமன் ஶ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.