இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு இராணுவ பயிற்சிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புது டெல்லியில் இடம்பெற்ற 7 ஆவது இந்திய – இலங்கை வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் இருதரப்பு இராணுவ பயிற்சிகளை மேம்படுத்தவும் இந்து சமுத்திரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான  அனுபவம் மற்றும் திறன்களை பரிமாறிக்கொள்ளவும் இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடல் இணை தலைவர்களான இந்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே மற்றும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் இடம்பெற்றது.

பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் இருதரப்பு உறவினை வலுப்படுத்த இணங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமையக அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்ததுடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் S.K.பத்திரண உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.